Friday, October 29, 2010

நிறக்குருடு !!!





ழைத்துளியை  இடுப்பில் தாங்கி 
முத்த மழையில் நனைவதை 
நான் நெருங்கி பார்க்கையில் 
வெட்கத்தில் பச்சையாய் சிரிக்கிறது 
பசும் புல் !

அதன் பசுமை நிறத்தில் நான் 
என்னை தொலைத்து நிற்கையில் 
எல்லாம் ஒளிக்கதிரின் விளையாட்டு 
என காதில் சொல்கிறது 
அறிவு !

தன் மனதின் நிறத்தை 
தன் இரு கைகள் விரித்து 
நம் கண்முன் காண்பிக்கிறாள் 
பூமித்தாய் என்கிறது 
மனம் !

இரவுப்பொழுதில் கருகி 
போய் விடுமோ அவள்மனம் 
நமட்டு சிரிப்புடன் 
நக்கலாய் கேட்கிறது 
அறிவு !

உறங்கும்பொழுது உடைகளாய்
உடுத்தி இருக்கும் கூந்தலின் 
நிறம் என்று கோபமாய் கூறுகிறது 
மனம் !

இம்சை தாங்காமல் 
இமைகளை மூடினேன் 
ஒரே நிசப்தம் 
பசும்புல் சொன்னது 
உங்கள் பார்வை  பிடித்திருப்பதாய் !

பார்வைதான் காரணம் என்று 
பாடுபொருளே சொல்ல 
மனது மௌனமானது !
அறிவு ஆறுதலாய் 
அதன் கையை பற்றியது !

இரண்டும் சேர்ந்து 
நிறங்களை புறக்கணித்தன ...
இமையை திறந்தேன் 
எதிரே புல் 
கருப்பு வெள்ளையாய் !

மருத்துவர் மனைவியிடம் 
சொல்கிறார்
எனக்கு நிறக்குருடு என்று !!!



Monday, October 25, 2010

கவிதை நினைவுகள் !!!

விலாசம்  !!!

எதிர்வீட்டில் குடியிருந்தாலும் 
என்னால் கண்டுபிடிக்க 
இயலவில்லை 
விலாசத்தை மட்டும் !

ஆம் ,
கனவில் வந்து காதலை சொல்ல 
காத்திருக்கும் என் கனவால் 
கண்டுபிடிக்க இயலவில்லை 
அவள் கனவின் விலாசத்தை மட்டும் !!!

இதயம் !!!

என்னவளின் நினைவுகளை 
என் இதயத்தில் 
வைத்து தைத்தேன் !

இதயம் வலித்தது 
எடுத்துவிட்டேன் வெளியே ...
என் இதயத்தை !!!


Thursday, October 21, 2010

யார் கடவுள் ?!





விடுமுறையில் 
நகரத்து தோழியை 
என் கிராமத்துக்கு  
அழைத்து வந்தேன் 

கிராமத்து விருந்தோம்பலில் 
விக்கித்துதான் போனாள் 

வீதியில் விளையாடிய 
வயது வராத குழந்தைகள் 
வீட்டு வாசலில் வீற்றிந்த 
வயது போன குழந்தைகள் என 
வியாக்கானம் விசாரிப்புகளில் 
வார்த்தைகள் இல்லை அவளிடம் !

வாழ்த்துவது வழிபடுவது 
வீண் சம்ப்ரதாயங்கள் எனும் 
முற்போக்கு தோழி 
விருப்பம் கேட்டு 
விருந்து வைத்த என் தாயை 
விழுந்து விழுந்து பாராட்டினாள் !

வயிறார உண்டு 
காலாற நடக்க 
வாய்க்காலும் வரப்பும் 
வரவேற்றது தோழியை 

வரப்பில் நான் நடக்க 
வாய்க்கால் தண்ணீரில் 
விளையாடி நடந்தாள் அவள் ...

பசுமையின் நிறம் பார்த்து 
பரவசத்தோடு சொன்னேன் 
கடவுளின் காட்சியை பார்த்தாயா என்று 
யார் கடவுள் என்றாள் 

பெரியாரின் தாக்கமோ என்றேன் 
யாரும் தாக்கவில்லை 
அறிவின் தாக்கம் என்றாள் 

அப்போ பெரியார் என்றேன் 
அறிவித்த ஆசான் என்றாள் 
அப்போ கல்வி அறிவை தரவில்லையா என்றேன் 

கல்வி மட்டுமே அறிவை தராது 
உதாரணம் 
ஏட்டை படித்த நீ 
கேள்வி கேட்கிறாய் 
பெரியாரை படித்த நான் 
பதில் சொல்கிறேன் 
என்றாள் புன்முறுவலோடு

அப்படியெல்லாம் சொல்லாதே
அறிவின் விடைதானே கேள்வி என்றேன் 
அறிவே கல்வியின் தொடக்கம் என்றாள் 

அப்படியென்றால் 
கடவுள் இல்லவே இல்லையா ? என்றேன் 
ராமர் பிறந்தது உண்மையா என்றாள் 

சிரித்தேன் சிரித்தாள்....
ஆக முன்னோர்தான் கடவுளா என்றேன் 
எனக்கு முன்னோர் உனக்கு கடவுள் என்றாள் 

அப்போ பெரியாரும் கடவுளும் ஒன்றா என்றேன் 
எனக்கு பெரியார் முன்னவர் 
உனக்கு கடவுள் முன்னவர் என்றாள் 

பாதி தூரம் சென்றிருப்போம் 
பாதையின் எதிரே பாம்பு 

வளைந்து வந்த நாகம் 
நேரே படமெடுத்தது ...
இரு கை கூப்பி 
இறைவனை வேண்டினேன்

இடது கை பிடித்து இழுத்தவள் 
வேகமாய்  நடந்தாள் 
வேறு பாதையில் ...

விருப்பங்களுடன் பயணிக்கிறேன் 
வாழ்க்கையின் வேறு பாதையில் ...!

Monday, October 18, 2010

காதலி ...தோழி ...முதிர்கன்னி !



தொலைதூர பயணம் ஒன்றிற்கு 
தோழி அழைத்தாள்
வேலை பளுவில் அலுத்து போன நான் 
விருப்பத்தோடு சம்மதித்தேன் 

நீண்ட பேருந்து பயணம்...
தோளில் சாய்ந்தபடியே மூழ்கி போனாள்
புத்தகத்தின் கற்பனை குளத்தில் ...

காற்று அவள் தலைமுடியுடன் 
கலந்து விளையாடியது என்
காதில் ரீங்காரமாய் கேட்டது ...

உறங்கி போயிருந்த என்னை 
இடம் வந்ததும் எழுப்பினாள்
தோழி கலைந்த அழகுடன் ...

காதல் செய்யும் 
கற்சிலைகளை படம் பிடித்து 
கொண்டிருந்தேன் நான் ...

நெருங்கி வந்தவள் 
காதில் ஏதோ சொன்னாள்
முழுதாய் கேட்கவில்லை ...

கண்கள் பார்த்து மறுபடியும் 
சொல்ல பணித்தேன் ...
கல்யாணம் செய்து கொள்வாயா? என்றாள்

அதிர்ச்சியில் விலகி 
அவள் கண்களை பார்த்தேன் 
கணவன் இறந்ததும் 
கண்களை பார்ப்பதில்லை யாரும் என்றாள் 

இரண்டாண்டுக்கு முன்னே 
என் காதலை நிராகரித்தவள் 
இரண்டாவது மனைவியாய்
ஏற்றுகொள்ள சொல்கிறாள் ...

கண்கள் மூடி சொன்னேன் 
அரணாக இருக்க சம்மதம் 
கணவனாக இருக்க இயலாது என்று !

நிராகரிப்பின் வலியை
நீரால் வெளியேற்றியவள்
அரணாய் இருப்பதற்காக 
புன்னகையை பரிசாக்கினாள்...

ஆறுதலாய் அவள் கண்ணீர் துடைத்து 
கரம் பிடிக்க கை எத்தனித்தும் 
பிடிக்காமல் அவ்விடமிட்டு வெளியேற 

எதிரே 
மனதின் காட்சியாய்
அந்த காதல் கற்சிலை !!!

Thursday, October 14, 2010

காதல் இரத்தம்


 எத்தனை முறை சொல்லியும்          
ஏற்கவில்லை காதலை அவள் 

ஒரு நாள் எதற்காகவோ 
எதிரே வந்தாள் ...நின்றாள்

அழகு அடித்தது 
என் கண்களில் 
அவளை விழியில் வைத்து 
இமையால் மூடினேன் 
ஒரே இருட்டு !

இருட்டுக்கு பயந்து 
இதயத்திற்குள் விழுந்து விட்டாள்
 வலி தாங்காமல் வலது கையை 
இடது நெஞ்சில் வைத்தேன் ...

அழுத்தம் தாங்காமல் 
அழுதே விட்டாள்
ஆக்சிஜன் தந்து ஆசுவாசபடுத்தியது
என் இதயம் !

அயர்ச்சியில் கண் விழித்தவளுக்கு
ஆச்சர்யம் ...ஒரே செந்நிறம் !
இரத்தத்தின் நிறத்தில்  மயங்கி 
இரத்தத்தோடு கலந்து விட்டாள் !

தேகம் சூடாகி 
இமை தெறிக்க 
எதிரே என்னவள் ....
என்னை காதலிக்கிறேன் என்றாள் !

சிரித்தேன் ...
வெட்கப்பட்டு வேகமாக சாய்ந்தாள்
என் இடது பக்க நெஞ்சில் ...!
இதயம்  சொல்லியது 
என் இரத்தம் அல்லவா ?!





Wednesday, October 13, 2010

பெண்ணாதிக்கம்

பள்ளி வாழ்க்கை

படித்தே தீர்ந்தது

கல்லூரி வாழ்க்கை

கனவுகளால் முடிந்தது



விளையாட்டாய் வேலைதேட

புறப்பட்டேன்

கஷ்ட்டப்பட்டு தேடியும்

கிடைக்கவில்லை



வாழ்க்கையை ஆரம்பிக்க

முயற்சிக்கையில்

காதல் ஆரம்பித்தது

முயற்சியே இல்லாமல்



வாழ்க்கையின் வெற்றிடத்தை

அவளே நிரப்பினால்

அனைத்து செலவையும்

அவளே பார்த்துகொண்டாள்



குடுத்த தொல்லையில்

தூக்கி கொடுத்தார்

ஒரு வேலையை

கடவுள்



காலம் கடந்தது

காதலை மூன்று முடிச்சால்

கல்யாணமாய்

முடித்து வைத்தேன்



காதல் மனதிலேறி

காமம் கண்களிலேறி

கர்ப்பம் வயிறேரி

குழந்தையாய் வெளியேறினான்

என் மகன் !



"மகனை மட்டும் பார்

வேலைக்கு நான் மட்டும்
போகிறேன்" என்றேன்

ஆணாதிக்கம் என்கிறாள்

என்ன செய்வது ?



"ஆணாதிக்கம்" என்ற

வார்த்தையை வைத்து

பெண்ணாதிக்கம் செய்வதை

மனைவியாய் இருப்பதால்

இவள் மனம் உணரவில்லை

காதலியாய் இருந்தால்

உணர்ந்திருப்பாளோ ?!

பள்ளி நினைவுகள்

அரைக்கால் சட்டை

கலைந்த முடி

மேல்சட்டை பையில்

பேனா மை

சிலிப்பர் செருப்பு

முதுகில் சுமையாய்

புத்தகப் பை





காலையில் குளிக்க சொன்னால்

கொலை வெறி வரும்

பள்ளிக்கு செல்கையில்

பயம் வெறுப்பு என

மனம் ஊசலாடும்

தேர்வுகள் என்றால்

உயிர் போய்

உடம்பு சில்லிடும்

ஆசிரியை அடிக்கையில்

கோபம் கண்ணீராய் கொப்பளிக்கும்





அனைத்தும்

நினைவுக்கு வருகிறது

என் மகனை

நான் பள்ளிக்கு அனுப்புகையில் !!!