Monday, October 18, 2010

காதலி ...தோழி ...முதிர்கன்னி !



தொலைதூர பயணம் ஒன்றிற்கு 
தோழி அழைத்தாள்
வேலை பளுவில் அலுத்து போன நான் 
விருப்பத்தோடு சம்மதித்தேன் 

நீண்ட பேருந்து பயணம்...
தோளில் சாய்ந்தபடியே மூழ்கி போனாள்
புத்தகத்தின் கற்பனை குளத்தில் ...

காற்று அவள் தலைமுடியுடன் 
கலந்து விளையாடியது என்
காதில் ரீங்காரமாய் கேட்டது ...

உறங்கி போயிருந்த என்னை 
இடம் வந்ததும் எழுப்பினாள்
தோழி கலைந்த அழகுடன் ...

காதல் செய்யும் 
கற்சிலைகளை படம் பிடித்து 
கொண்டிருந்தேன் நான் ...

நெருங்கி வந்தவள் 
காதில் ஏதோ சொன்னாள்
முழுதாய் கேட்கவில்லை ...

கண்கள் பார்த்து மறுபடியும் 
சொல்ல பணித்தேன் ...
கல்யாணம் செய்து கொள்வாயா? என்றாள்

அதிர்ச்சியில் விலகி 
அவள் கண்களை பார்த்தேன் 
கணவன் இறந்ததும் 
கண்களை பார்ப்பதில்லை யாரும் என்றாள் 

இரண்டாண்டுக்கு முன்னே 
என் காதலை நிராகரித்தவள் 
இரண்டாவது மனைவியாய்
ஏற்றுகொள்ள சொல்கிறாள் ...

கண்கள் மூடி சொன்னேன் 
அரணாக இருக்க சம்மதம் 
கணவனாக இருக்க இயலாது என்று !

நிராகரிப்பின் வலியை
நீரால் வெளியேற்றியவள்
அரணாய் இருப்பதற்காக 
புன்னகையை பரிசாக்கினாள்...

ஆறுதலாய் அவள் கண்ணீர் துடைத்து 
கரம் பிடிக்க கை எத்தனித்தும் 
பிடிக்காமல் அவ்விடமிட்டு வெளியேற 

எதிரே 
மனதின் காட்சியாய்
அந்த காதல் கற்சிலை !!!