Friday, December 10, 2010

காயும் பழமும் !!!

 
காடு வயல் வரப்பு விட்டு
கல்விக்கூடம் தேடி
விபரமறியா ஞானிகளோடு
வியர்வையாய் சேர்ந்துபோனேன்...

என் வணக்கத்துக்கும்
மரியாதை தந்தார்கள்
ஆசிரியரும் தேசியக்கொடியும் !

சாதியையும் தெரியாது
சகதியையும் தெரியாது
சர்வமும் தெரியும்
மனிதர்களாய் மட்டும் !

மேடு பள்ளம் இல்லா
மென்மையான தோழிகள்
கன்னத்தில் முத்தம் தந்தாலும்
காதல்  இல்லா நட்பு !

அழகான ஆசிரியை 
மலைகளின் வடிவமாய்
மேடுகள் இருந்தாலும்
முகம் மட்டுமே
நிலவாய் அழகு !

அடித்து புரண்டு 
அழுது கண்ணீர் விடுவோம்
அடுத்த கணமே
காயும் பழமும்
இரட்டை விரல்களால்
ஒற்றை நட்பாகும் !

அத்தனை இருந்தும்
ஆசைப்பட்டோம்
அப்பாபோல் வளர !!!

அப்பாவாக ஆனாலும்
ஆசைபடுறோம்
அதே குழந்தையாய்
மீண்டும் மலர !!!

ஆசை நிறைவேறியது
ஆனால் உருவம் மட்டும்
கிழவன் கிழவியாய் !!!